நல்வழி

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

நல்வழி

  1. புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
    மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
    ஈதொழிய  வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
    தீதொழிய நன்மை செயல்

  2. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
    இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
    பட்டாங்கில் உள்ள படி

  3. இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
    இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
    உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
    விண்டாரைக் கொண்டாடும் வீடு

  4. எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
    புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
    மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
    ஆங்காலம் ஆகும் அவர்க்கு

  5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
    பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
    நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
    துஞ்சுவதே மாந்தர் தொழில்

  6. உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
    கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
    கடலோடி மீண்டும் கரையேறினால் என்
    உடலோடு வாழும் உயிர்க்கு

  7. எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
    பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
    அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
    பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

  8. ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
    கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்
    மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
    தரியாது காணும் தனம்.

  9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந்  நாளுமவ்வா(று)
    ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
    நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
    இல்லை என மாட்டார் இசைந்து

  10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
    மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா
    நமக்கும் அதுவழியே  நாம்போம் அளவும்
    எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்

  11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
    இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
    என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
    உன்னோடு வாழ்தல் அறிது

  12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு

  13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
    சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
    ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
    மெய்அம் புவியதன் மேல்

  14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
    இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
    வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
    உயிர்விடுகை சால உறும்

  15. சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
    அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
    இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
    விதியே மதியாய் விடும்

  16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
    கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
    கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
    அற்புதமாம் என்றே அறி

  17. செய்தீ வினையிருக்கத்  தெய்வத்தை நொந்தக்கால்
    எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
    ஏஅறும்-பாவம்ஸ்ரீஏ என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
    வெறும்பானை பொங்குமோ மேல்?

  18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
    உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
    இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
    சரணம் கொடுத்தாலும் தாம்

  19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
    பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்  – போவிப்பம்
    பாழின் உடம்பை வயிற்றின்  கொடுமையால்
    நாழி அரிசிக்கே நாம்

  20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
    கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
    மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
    வெறுமைக்கு வித்தாய் விடும்

  21. நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
    பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
    வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
    தரும்சிவந்த தாமரையாள் தான்

  22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
    ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
    பாவிகாள் அந்தப் பணம்

  23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
    பாதாள மூலி படருமே – மூதேவி
    சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
    மன்றோரம் சொன்னார் மனை

  24. நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
    ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
    உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
    மடக்கொடி இல்லா மனை

  25. ஆன முதலில் அதிகம் செலவானால்
    மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

  26. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
    தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந்திடப் பறந்து போம்

  27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
    அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
    நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
    எனையாளும் ஈசன் செயல்

  28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
    எண்பது கோடி நினைந்து எண்ணுவன –  கண்புதைந்த
    மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
    சாந்துணையும் சஞ்சலமே தான்

  29. மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
    இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
    கற்றா தரல்போல் கரவாது அளiப்பரேல்
    உற்றார் உலகத் தவர்

  30. தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
    பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே
    ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
    வெறுத்தாலும் போமோ விதி

  31. இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்
    ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
    வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
    தாரத்தின் நன்று தனி

  32. ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
    மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
    தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
    உண்ணீர்மை வீறும் உயர்ந்து

  33. வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்  வேழத்தில்
    பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
    பாரைக்கு நெக்குவிடாப் பாறை  பசுமரத்தின்
    வேருக்கு நெக்கு விடும்

  34. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
    எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
    இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
    செல்லா(து) அவன்வாயிற் சொல்

  35. பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
    ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே – தூவா
    விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
    உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு

  36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
    கொண்ட கருவளiக்கும் கொள்கைபோல் – ஒண்தொடீ
    போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
    மாதர்மேல் வைப்பார் மனம்

  37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
    அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
    கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
    விண்ணுறுவார்க் கில்லை விதி

  38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
    அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
    தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
    போனவா தேடும் பொருள்.

  39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
    தப்பாமல் தன்னுள் பெறானாயின் – செப்பும்
    கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
    முலையளவே ஆகுமாம் மூப்பு

  40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
    திருவா சகமும் திருமூலர் சொல்லும்
    ஒருவா சகமென் றுணர்.

Leave a Reply

Optimized by Optimole