தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகமாக பதிவாகி வரும் சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக பொதுச் சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (DPH) விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, தோல் அரிப்பு முதல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வெப்பத்தாக்கம் (Heatstroke) வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகள் முழு வீச்சில் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் வெப்ப பாதிப்பு சிகிச்சைக்காக பிரத்யேக படுக்கைகள் மற்றும் குளிரூட்டும் வசதிகள் கொண்ட தனி வார்டுகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெப்ப பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் அருந்துவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியில் செல்லும்போது மெல்லிய பருத்தி ஆடைகளை அணியவும், குடை அல்லது தொப்பியை பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நேரடி வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மயக்கம், அதிக தாகம், தலைவலி அல்லது தசைப்பிடிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வாய்வழி மறுசீரமைப்பு உப்பு (ORS) பாக்கெட்டுகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஐஸ் கட்டிகளை இருப்பு வைக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று இந்த செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





