கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயிரிழந்த காகம் ஒன்றில் H5N1 பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அவசர சுகாதார ஆலோசனை மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், தங்கள் பகுதிகளில் பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, சுகாதாரமற்ற சூழலில் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதால், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் போதிய பாதுகாப்பு கவசங்களை அணியுமாறும், பொது இடங்களில் சுகாதாரத்தை பேணுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றாலும், விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது பிற மாவட்டங்களில் இருந்தோ கொண்டு வரப்படும் பறவைகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





