புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: இந்தியா மன்னிக்காது!

தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற இளைஞன் வெடிபொருட்களுடன் சென்று இந்திய துணை-இராணுவத்தின் வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட துணை-ராணுவத்தினர் பலியாகிவிட்டனர். இந்திய துணை-இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதினால் பொது மக்களின் கோபம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் மக்கள் இந்த பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஒரு வலுவான பதிலைக் கோரி வருகின்றனர். இதையடுத்து “கண்மூடித்தனமாக சுடுபவர்கள் மற்றும் துப்பாக்கிகளையும் குண்டுகளையும் வழங்கி இந்திய படையினரை இலக்காகக் கொள்பவர்கள் விட்டு வைக்கப்பட மாட்டார்கள்”, என பிரதமர் மோடி கூறினார். புல்வாமா பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்த படையினருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக “இந்தியா கேட்” வாயிலில் மக்கள் இன்று பெருமளவில் கூடியுள்ளனர்.

பத்து நாட்களுக்கு முன் ஜெய்ஷ்ஹ்-ஈ-முகமத் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ரௌப்ப் அஸ்கர் கராச்சியில் ஒரு பேரணியில் பங்கேற்ற பொழுது, ‘ இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவோம்’ என்று கூறியது தெரியவந்துள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்க, பயங்கரவாதிகள் பாக்கிஸ்தான் இராணுவ முகாம்களுக்கு அருகே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

காஷ்மீர் புல்வாமாவிலிருந்து 3,550 கி.மீ. தொலைவில், இந்தியாவின் தெற்கு முனையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவலப்பேரி கிராமம் வரை இந்த துயரம் பற்றிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த துயர சம்பவத்தை குறித்து கவிஞர் வைரமுத்து அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கூறியதாவது,

இந்தியா மன்னிக்காது

எப்படி சகிப்போம்? காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை
எப்படி பொறுப்போம்? சிம்லா பனிக்கட்டிகள் சிவப்பாய் உறைவதை

ஏ தீவிரவாதமே,
நீ புகுந்தது எல்லைப்புறத்திலல்ல, கொல்லைப்புறத்தில்
இந்திய வீரன் எவனும் கள்ளச்சாவு சாகமாட்டான்!
எங்கள் மரணத்தின் வாசல்
நெஞ்சின் பக்கம் உள்ளது
முதுகுப்பக்கம் அல்ல

உயிரென்ற ஒரு பொருளே
உலகின் பெரும் பொருள்
அதனை மண்ணுக்கீந்த மாவீரர்களே
விழுகிறது உங்கள் பாதங்களில்
வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்

ஓயமாட்டோம்
சாயமாட்டோம்
எங்கள் தேசிய கீதத்தில்
ஒப்பாரி ராகம் ஒட்டாது
எங்கள் தேசிய கொடி
அரைக்கம்பத்தில் நிற்காது

அகிம்சா தேசம் பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள்
இந்திய மன்னிக்காது இனியும்

மாவீரர்களே
உங்கள் கருகிய சீருடைகளால்
தீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம்
இந்தியாவின் கண்ணீரை
விரல்களால் அல்ல
துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம்

நாய்கள் கனவு கண்டால்
எலும்பு மழை பெய்யும்
நாங்கள் கனவு கண்டால்
ஆகாயம் அதிரும்
நட்சத்திரம் உதிரும்

மாவீரர்களே
உங்கள் அஸ்திகளை கங்கை காவிரியில் அல்ல
சத்துருக்கள் சாப்பாட்டில் கரைப்போம்

சமாதானம் மட்டும்மல்ல
மரணம் கூட ஒருவழிப்பாதை அல்ல

எம்முயிர் காக்க
தம்முயிர் தந்த தங்கங்களே இதோ
நூற்று முப்பது கோடி தலைகளின்
ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

வீழ்க சூழ்ச்சி
வெல்க வீரம்
வாழ்க நாடு
சூழ்க வெற்றி!

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com